இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் (National Center for Seismology) தகவல்களின்படி இன்று காலை 8.44 மணியளவில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.8 மெக்னிடியூட் ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது 28.86 பாகை வடக்கு அட்சரேகையிலும், 77.06 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் மையமிட்டிருந்தது.
மிகவும் லேசான நிலநடுக்கம் என்பதால், பெரிய அளவிலான கட்டடச் சேதங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், காலை வேளையில் ஏற்பட்ட இந்த அதிர்வினால் நகரின் சில பகுதிகளில் மக்கள் லேசான அச்சமடைந்தனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் நிலநடுக்க அபாயம் உள்ள மண்டலத்தில் (Seismic Zone) அமைந்துள்ளதால், இத்தகைய சிறிய அளவிலான அதிர்வுகள் அவ்வப்போது பதிவாவது வழக்கமான ஒன்று என நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.