நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்றில் வழங்கிய இனிப்பு பண்டத்தில் போதைப்பொருள்

28 6

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்றில் வழங்கிய இனிப்பு பண்டத்தில் போதைப்பொருள்

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய இனிப்பு பண்டங்களில் ஆபத்து மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பகிர்ந்தளித்த அண்ணாச்சி பழ இனிப்பில் ஆபத்தான மெத்தம்பேட்டமைன்(methamphetamine) என்ற போதைப்பொருள் இருப்பதாக பொலிஸார் இன்று(14) அறிவித்துள்ளனர்.

அத்துடன், விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த இனிப்பு பண்டத்தை உடனடியாக பயன்பாட்டில் இருந்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஆக்லாந்து சிட்டி மிஷன், தாங்கள் வழங்கிய இனிப்புகளில் அதிக அளவிலான சட்டவிரோத போதைப் பொருட்கள் கலந்து இருப்பதை கண்டறிந்த பின்னர் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது, நியூசிலாந்து போதைப்பொருள் நிறுவனம், பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட மஞ்சள் நிற தாளில் சுற்றப்பட்ட வெள்ளை நிற இனிப்பில் மெத்தம்பேட்டமைன் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இனிப்பில் அன்னளவாக 3 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதாகவும், இது பயனர்கள் எடுத்துக் கொள்ளும் அளவை விட 100 மடங்கு அதிகமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதனை உட்கொள்ளுதல் மிகவும் ஆபத்தானது மற்றும் உயிரை பறிக்க கூடியது எனவும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தொண்டு நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், போதைப்பொருள் உள்ளடங்கிய இனிப்புகள் தரமாக அடைக்கப்பட்ட பைகளில் அடையாளம் தெரியாத நபரால் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், உணவு பொதிகளுடன் சேர்ந்து இந்த இனிப்புகளையும் விநியோகம் செய்ததாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version