யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

Ilankumaran

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மக்களிடம் அதிகமான காசோலைகளைப் பெற்றுக் கொண்டு, அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் தம்முடன் தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்குப் பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

மேலும், யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளின் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version