மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 24 மணி நேரப் பணிப் புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

images 5 2

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவுப் புத்தகத்தைப் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த அநீதியான முடிவு தாதியர் சேவையின் கௌரவத்திற்கும் மற்றும் தனித்துவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை கருத்தில் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (நவம்பர் 12) காலை 7 மணி தொடக்கம் நாளை (நவம்பர் 13) காலை 7 மணி வரை 24 மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்திய சேவைகள் இடம்பெற்ற போதும், தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படும் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version