மன்னார் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவருக்குச் சொந்தமான சுமார் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று (அக்டோபர் 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவர், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களைத் தொடங்க நிதி வழங்கியுள்ளார்.
இந்த முதலீடுகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தேங்காய் தோட்டங்கள், ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்த முதலீட்டு நடவடிக்கையிலும் சுமார் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சொத்துக்களைக் குற்றவியல் ரீதியாகக் கையகப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளரை மோசடி செய்ததற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு நபர்களும் முருங்கன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.