மட்டக்களப்பு – செங்கலடி, சின்னப்புல்லுமலை கிராமத்தில் நேற்று (மார்ச் 7) இரவு காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தான் தங்கி வேலை செய்துவந்த தோட்டத்திலுள்ள தங்குமிடம் (வாடி) மீது காட்டு யானை தாக்குதல் நடத்திய போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் குறித்த தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த தங்குமிடத்தை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது. அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்ற குறித்த நபரைத் துரத்திச் சென்ற யானை, அவரைத் தாக்கியுள்ளதுடன், அவர் நிலத்தில் விழுந்தபோது மிதித்தும் கொன்றுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பின்னர், மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார். இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.