ஹொரானா, மல்வனேகம பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக 46 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பொருவடண்டா பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்டை வீட்டாருக்கிடையே நிலவி வந்த நீண்டகாலப் பகை, நேற்று திடீரென மோதலாக மாறியுள்ளது. இதன்போது, ஆத்திரமடைந்த அண்டை வீட்டுக்காரர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை ஹொரானா பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரானா ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரானா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

