மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

Untitled 35

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29, 2026) கொழும்பு, வத்தளை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட பின், அவர்களைக் கிணற்றில் வீசிக் கொலை செய்து வந்த கும்பலை இயக்கிய முக்கிய நபரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

கடந்த 20-ஆம் திகதி நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இதன்போது அந்தத் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் அழுதுகொண்டிருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளின் மூலம், ஏற்கனவே ஒரு தம்பதி உட்பட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்தக் கொள்ளை மற்றும் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்துகளை விநியோகித்து, முழு கும்பலையும் பின்னணியில் இருந்து இயக்கி வந்த ‘சிவா’ எனப்படும் 49 வயதுடைய திவாகரன் அடையாளம் காணப்பட்டார். வத்தளை பகுதியில் மருந்து விநியோகஸ்தராகப் பணியாற்றி வந்த இவர், திட்டமிட்ட முறையில் இக்குற்றச் செயல்களை ஒருங்கிணைத்து வந்துள்ளார். இவரிடமிருந்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலதிக மயக்க மருந்துப் பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இக்கும்பலிடம் இருந்து ஏற்கனவே இரண்டு ஆட்டோக்கள், ஒரு கார் மற்றும் கோடரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாரிய குற்றச் செயலில் இன்னும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதேனும் கொலைச் சம்பவங்கள் இவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version