” தோற்கடிக்கவே முடியாது எனக் கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.” – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரக்கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ரஜரட்ட (அநுராதபுரம்) என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்கு தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றிபெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை.
பிரபாகரனை தோற்கடிக்க முடியாது, புலிகள் அமைப்பு பலம் மிக்கது என அன்று தெரிவித்தனர். ஆனால் அந்த அமைப்புக்கு மூன்றரை வருடங்களில் முடிவுகட்டிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச.
நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை பொறுப்பேற்றார். அதன்பின்னர் கொரோனா தொற்று பரவியது. எமது ஜனாதிபதி துவண்டுவிடவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார்.
நாட்டு மக்களின் உயிரை பாதுகாத்தார். எனவே, இவ்விரு தலைவர்களும் உலக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள். ” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
#SriLankaNews