தேர்தல் வரும்போது எமது பலம் தெரியும்! – சஜித்துக்கு ஜோன்ஸ்டன் சவால்

Johnston Fernando

” இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன். – இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” ஐக்கிய மக்கள் சக்திக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்குவதற்கு மூன்று நாடுகள் தயார் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அவர் கூறுவது உண்மையெனில், அந்நாடுகளுடன் பேச்சு நடத்தி முதலில் எரிபொருளை கொண்டுவரட்டும். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரிக்கும். இதோ, கோத்தாவால் முடியாததை சஜித் செய்துவிட்டார் என மக்கள் பாராட்டுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் அவர் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் அவர் தலைமையிலான ஆட்சி எப்போது வரும் என தெரியாது. அதுமட்டுமல்ல இப்பிரச்சினைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வை கண்டுவிடுவோம். வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படும். எனவே, முடிந்தால் எரிபொருளை வரவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் ஒளியவில்லை. மக்களுடன்தான் இருக்கின்றோம். தேர்தலொன்று வரும்போது அரசின் பலம் தெரியவரும்.” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version