18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

25 679d968d808df

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில், 18 வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு மூன்று பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்ற நீதியரசர் தமரா தென்னகோன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கினார்.

குடா வஸ்கடுவ, லிட்டில்டன் வத்தையைச் சேர்ந்த சுரேஷ் குமார, ‘ரலஹாமி’ என அழைக்கப்படும் சுகத் குமார மற்றும் ‘பீட்டா’ என அழைக்கப்படும் சமித சிசிர குமார ஆகிய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் திகதி, குடா வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், அதே பகுதியில் உள்ள ஒரு இறுதிச் சடங்கு வீட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நீண்டகால சாட்சி விசாரணைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்றைய தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னதாக, மேல் நீதிமன்றத்தின் சம்பிரதாய முறைப்படி நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. அங்கிருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறு பணித்த நீதியரசர், பிரதிவாதிகளிடம் இறுதி வாக்குமூலம் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டார். தாங்கள் இந்தக் கொலையைச் செய்யவில்லை எனப் பிரதிவாதிகள் இதன்போது வாதிட்டனர். இருப்பினும், சாட்சியங்களின் அடிப்படையில் நீதியரசர் மரண தண்டனையை உறுதிப்படுத்தினார்.

பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க வன்னியாராச்சியும், அரசு தரப்பில் சான்ஜென்ட் மனோஜ் நிஷானும் முன்னிலையாகியிருந்தனர். 18 ஆண்டுகளாகத் தமக்குக் கிடைக்காத நீதி இன்று கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் இதன்போது தெரிவித்தனர்.

 

 

Exit mobile version