வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இறை விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டைசெய்யப்பட்டது.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன் சிலைகளும் களவாடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள் பல தரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற வழக்கினை காரணம் காட்டி தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசார் அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த இரு தினங்களிற்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதின்றம் அனுமதி வழங்கியது. உடைக்கப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

343742358 1202953150406089 5581026143871851622 n

இதனையடுத்து இன்றைய தினம் காலை சுபநேரத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் மீண்டும் வைக்கப்பட்டது.

பல சிரமங்களுக்கு மத்தியில் புதிய விக்கிரகங்கள் மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆலயத்தின் நிர்வாகத்தினர், பூசாரியார், சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினர் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version