100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

tamilni 232

100 பொருட்களுக்கு வட் வரி விதிக்கத் திட்டம்

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவத் திட்டத்தின் படி, இதுவரை வட் வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு புதிதாக வட் வரி அறவிடப் போகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான நேற்றைய(15.11.2023) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி 133 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதோடு புதிய வரிகள் ஊடாக 800 பில்லியன் ரூபாயை அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உதாரணமாக சம்பளம் 100 ரூபா அதிகரிக்குமாயின் வரி 600 ரூபாயாக அதிகரிக்கும். வரி அறவிடப்படாத 100 பொருட்களுக்கு வரி அறவிடப்போகின்றனர். தொலைபேசி, கணனி, அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் வரி அறவிடப்போகின்றனர்.

அதேநேரம் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் 18 வீதம் வரி அறவிடப்படப் ​போகிறது. தேயிலை கொழுந்து உள்ளிட்ட மேலும் பல பொருட்களுக்கு வட் வரியை அறவிடப்போகின்றனர்.

எனினும் இது எவற்றையும் ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையில் வெளியிடவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version