மோசடி வழக்கு தொடர்பாக, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடுவெல மாநகர முதல்வர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிசை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொழிற்சங்க தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தை, தொழிற்சங்க அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி 3.6 மில்லியன் ரூபாய்களுக்கு குத்தகைக்கு எடுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தேக நபராகப் பெயரிடுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக செய்யப்பட்ட கோரிக்கையின் மீது தீர்ப்பை வழங்குவதற்காகவே, இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் அமைச்சர் சமரசிங்கவிடமிருந்து ஏற்கனவே பெற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் 2025 ஜூலை 25 ஆம் திகதி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.