திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (09) திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளைக் கருத்திற்கொண்டு, பிணை மனுக்களை நிராகரித்த மேல் நீதிமன்றம், அனைத்துப் பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

