சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்த த.தே.ம.மு குழுவினர் இவ்வாரம் சென்னை பயணம்!

kajendrakumar

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், அதற்காகத் தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (த.தே.ம.மு) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இவ்வாரம் சென்னைக்குச் செல்லவுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணத்தின் முக்கிய நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்:

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ‘ஏக்கியராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பைத் திணிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கான உண்மையான அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர வேண்டும்.

இதற்குத் தேவையான அழுத்தங்களைச் சர்வதேச சமூகம், குறிப்பாகப் பிராந்திய வல்லரசான இந்திய அரசாங்கம், இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறான சூழலை உருவாக்குவதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக, தமிழக அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து நிலைமைகளைத் தெளிவுபடுத்தவும், அவர்களது ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் த.தே.ம.மு உயர்மட்டக் குழு சென்னை செல்கிறது.

இச்சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காகப் பின்வரும் பிரதிநிதிகள் சென்னை செல்லவுள்ளனர்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (பாராளுமன்ற உறுப்பினர் & தலைவர் – த.தே.ம.மு)
பொ. ஐங்கரநேசன் (தலைவர் – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்)
செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர் – த.தே.ம.மு)
த. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)
க. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி & உத்தியோகபூர்வ பேச்சாளர்)
ந. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி & பிரசாரச் செயலாளர்)

Exit mobile version