நாட்டில் இலட்சக்கணக்கானோருக்கு பாரிய நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நெற்செய்கைக்கான சேதம் தொடர்பில் முழுமையான அறிக்கையை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
வறட்சி தொடர்பில் இன்று (18.08.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (18.08.2023) நிலவரப்படி 15 மாவட்டங்களில் 60,943 குடும்பங்களைச் சேர்ந்த 210,652 பேர் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு சில மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.