நாட்டின் எதிர்காலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எம்மால்தான் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நெறிமுறை சிந்தனைக்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து எங்களால் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவது எமது கடமை. இதற்கு எம்முடன் இணையுமாறு பண்டாரநாயக்காவின் சமாதியிலிருந்து சகல மக்களுக்கும் அழைப்பு விடுகின்றேன்.
இன்று நாடு மாறிவிட்டது. உலகமும் மாறிவிட்டது. ஆனால் பண்டாரநாயக்காவின் முற்போக்கான கொள்கை வேலைத்திட்டம் இன்றைய யுகத்துக்கு ஏற்றதைப் போலவே அன்றே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே புதிய பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் எதிர்கால நலன்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றை விரைவாக கொள்கை ரீதியாக செயற்படுத்த முன்னோக்கி செல்ல எம்முடன் இணையுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.