டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

tamilnadu 4

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களைக் கப்பல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 தொன் (Metric Tons) நிவாரணப் பொருட்கள் இலங்கை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளில் மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியுள்ளன.

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை (டிசம்பர் 6) பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்கத் தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டிருந்தார்.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த உதவி நடவடிக்கை, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தமிழக அரசு தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version