தமிழ் தலைமைகள் கூட்டாக இயங்கும் நிலை விரைவில் வரும்! – ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

20220424 135818

தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் தமக்கான அரசியல் தலைமை இல்லை என்ற உணர்வு இருந்துகொண்டு உள்ளது. என்றாலும் சுயமாக சிந்தித்து, கூட்டாக இயங்கும் நிலைமை ஒன்று உருவாகும், அது விரைவில் வெளிப்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது. இதில் ஆரோக்கியமான பதில் சிலவற்றுக்கு தீர்மானங்கள் கிடைத்துள்ளன. சில விடயங்களில் ஒற்றுமையான தீர்மானங்கள் கிடைக்கவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் விடயங்களில் ஒற்றுமையான பதில்கள் கிடைத்துள்ளன. இன்னமும் இரண்டொரு தினங்களில் இன்றைய கூட்டத்தின் தீர்மான அறிக்கை வெளியிடப்படும். அதன் பொறுப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல விடயங்களில் ஒற்றுமையான தீர்மானங்கள் எட்டப்படவில்லை என்ற கசப்பு இருந்தாலும், இப்படி கட்சிகள் சந்தித்து பேசுவது ஆரோக்கியமானது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.

ஆகவே அந்த அளவுக்கு இயன்றதை நாம் செய்வோம். தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் தமக்கான அரசியல் தலைமை இல்லை என்ற உணர்வு இருந்துகொண்டு உள்ளது. என்றாலும் சுயமாக சிந்தித்து, கூட்டாக இயங்கும் நிலைமை ஒன்று உருவாகும், அது விரைவில் வெளிப்படுத்தப்படும் என நம்புகின்றோம்.- என்றார்.

#SriLankaNews

Exit mobile version