5 18
இலங்கைசெய்திகள்

கோட்டாவைப் போன்று அநுரவும் துரத்தப்படலாம் : எச்சரிக்கும் சுமந்திரன்

Share

கோட்டாவைப் போன்று அநுரவும் துரத்தப்படலாம் : எச்சரிக்கும் சுமந்திரன்

சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச (Gotabaya Rajapaksa) இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டதைப் போல அநுரவுக்கு எத்தனை வருடங்களோ தெரியவில்லை என தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சி தான். அந்தக் கட்சி தான் சமஷ்டிக் கட்சி. எங்களது இந்தக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் மனம் மாறி இப்போது எமது நிலைப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இங்குள்ள பல்வேறு கட்சிகளும் சமஷ்டி என்று தானே கூறுகின்ற நிலையில் அதனை அன்று முதல் இன்றுவரை கொள்கையாக வைத்திருக்கும் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்கலாம். இதனை விடுத்து ஏன் மற்றைய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

இப்போது பலரும் மாற்றம் வேண்டும் எனக் கூறுகின்றனர். அது எங்கள் கொள்கையில் மாற்றமில்லாது காலத்தோடு வரும் மாற்றங்களை செய்துள்ளோம். எப்போதுமே கொள்கை மாறா அடையாளம் மாறாத கட்சியாக எமது கட்சி திகழ்ந்து வருகிறது.

மேலும் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஐனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) பலதையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆகவே அவர் சொன்னதை செயலில் செய்து காட்ட வேண்டும். அதனைவிடுத்து அதற்கு மாறாக அவர் செயற்படக் கூடாது.

ஆனால் இப்போது அதற்கு மாறான நிலைப்பாடுகளை எடுத்து சறுக்கத் தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தாம் சொன்னதை தாமே செய்யாமல் இருப்பது அவருக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிங்கள பெரும்பான்மை வாக்குகளுடன் ஐனாதிபதி பதவிக்கு வந்த கோட்டாபய ராஐபக்ச இரண்டு வருடங்களில் துரத்தப்பட்டார். அதேபோல இவருக்கும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள்.

அதனால் சிங்கள பெரும்பான்மை மக்களை மீறி எதனையும் செய்ய முடியாமல் தாம் சொன்னதை மீறியே செயற்படுகின்ற நிலைக்கு வந்துள்ளார். ஆக கோட்டாபய போல இவரும் செயற்பட முயன்றால் இவருக்கும் எத்தனை வருடங்களோ தெரியவில்லை.

ஆக மொத்தத்தில் இப்போதைய ஐனாதிபதியின் செயற்பாடுகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றது. முன்னைய நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கத்தில் செயற்பட்ட பல விடயங்களில் எம்மோடு இணைந்து பயணித்தவர்களாக இருகின்றனர்.

ஆகையினால் இன்று அதிகாரத்திற்கு அவர்கள் வந்துள்ளதால் அத்தகைய செயற்பாடுகள் தொடர வேண்டுமானால் முன்னர் இதனைச் செய்தவர்களையும் உள்ளடக்கி பலமான அணியாக அல்லது கட்சியாக தமிழ் மக்கள் எங்களை அனுப்ப வேண்டும்.

அப்படி வடக்கு கிழக்கு முழுவதும் ஒரே கட்சியாக இருக்கிற தமிழரசுக் கட்சிக்குத் தான் மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அதே போன்று இம்முறையும் வழங்க வேண்டும்.

எனவே கொள்கை மாறாத அடையாளம் மாறாத அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படியாயின் இதே நிலைப்பாட்டில் பயணிக்கிற தமிழரசுக் கட்சிக்கு முழுமையான ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.

இதேவேளை இன்னுமொரு விடயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டம் போல பல்வேறு தரப்பினர்களும் கலந்து கொள்கின்ற கூட்டத்திற்கு வராமல் மறைந்து ஒளிந்திருக்கும் தரப்பிற்கு பகிரங்க சவாலொன்றை விடுக்கிறேன்.

அதாவது எவருடனும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார். யாரேனும் துணிந்தால் வாருங்கள். அதனை விடுத்து ஒளிந்து மறைந்திருந்து பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பாக ஐக்கிய ராச்சிய என்று கத்திக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். அதில் என்ன உள்ளது. அதன் வரைவிலக்கணம் என்ன என்று தெரியாமல் பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

ஏக்கிய ராச்சிய என்பதன் வரைவிலக்கணத்தை முதலில் பார்க்க வேண்டும். அது ஒற்றையாட்சி அல்ல. அதனைவிடுத்து ஒற்றையாட்சி என்று சொல்லிக் கொண்டு திரிவதில் பலனில்லை.

இவ்வாறான நிலைமையில் தேசியம் என்ற ஒரு வார்த்தையை மந்திரம் போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதற்கும் உண்மையை அறிந்து பேச வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என கூறிக் கொண்டு திரிபவர்கள் கடந்த தேர்தலில் தமக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏன் கிழக்கிற்கு கொடுக்கவில்லை. அதனையும் யாழ்ப்பாணத்திலேயே வைத்துக் கெண்டிருந்தவர்கள் இப்போது மீளவும் இணைந்த தாயகம் பற்றி பேசுகின்றனர்.

ஆனால் எங்களது கட்சியை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு முழுவதும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக கடந்தமுறை அம்பாறைக்கு அந்த ஆசனத்தை வழங்கியிருந்தோம். செய்ய வேண்டியமை செய்யாமல் வெறுமனே பொய்களை கூறி கொண்டிருப்பதில் அர்த்தமில்லை” என்றார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...