“கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று, இன்று உரிய நேரத்தில், இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ருவிட்டர் பதிவொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டமும் இரத்துச் செய்யப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் எனவும் சபாநாயகர் முன்னதாகக் கூறியிருந்தார்.
எவ்வாறிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இன்று இணைய வழியில் கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment