மலையக வீதிகள் புனரமைப்பில் தாமதம்: நிர்வாகச் சிக்கல்களை விளக்கியது போக்குவரத்து அமைச்சு!

Untitled 109 1

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ‘டித்வா’ சூறாவளி காரணமாகச் சேதமடைந்த வீதிகள் இதுவரை புனரமைக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்து வரும் நிலையில், அது குறித்த தெளிவுபடுத்தல்களைப் போக்குவரத்துப் பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.ஆர்.எம். ருஷ்டி வழங்கியுள்ளார்.

மலையகத்தில் சேதமடைந்துள்ள பல வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பதே புனரமைப்புப் பணிகளில் உள்ள பிரதான சவாலாகும். இந்த வீதிகள் பெரும்பாலும் உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது பெருந்தோட்டங்களுக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திற்குட்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள் முறையான கோரிக்கைகளை முன்வைத்தால், அந்த வீதிகளைப் புனரமைக்கத் தேவையான மத்தியஸ்த உதவிகளை வழங்கத் தமது அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள வீதிகள் குறித்து அந்தச் சபை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, டித்வா சூறாவளியால் சேதமடைந்த 302 வீதிகளில், புனரமைக்க முடியாத ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய அனைத்து வீதிகளும் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் உரிய நிதி ஒதுக்கீடுகளின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

 

 

Exit mobile version