எரிபொருள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை : குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஞ்சன
எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் முன்னாள் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) பதிலளித்துள்ளார்.
அதாவது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக அப்போதைய அரசாங்கங்களின் அமைச்சரவை அமைச்சர்கள், செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில தனிநபர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தை முந்தைய அரசாங்கம் செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் 2022 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திடமிருந்தும், 2023 ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்தும் உத்தரவுகளைப் பெற்றது.
இருப்பினும், உயர் நீதிமன்றம் 2024 ஓகஸ்ட் 30 அன்று அந்த உத்தரவை இரத்து செய்து ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளைக் கோரி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியது” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.