இலங்கையில் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதில் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரவின் வழிகாட்டலில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
தற்போதைய தரவுகளின்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை போன்ற தென் மாகாண மாவட்டங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற கிழக்கு மாகாணப் பகுதிகளிலும் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருவமழையினால் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் நுளம்புகள் பெருகும் வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.