நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை 4,289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை திருத்தங்களுக்கு அமைய, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் சுமார் 1,683 வழக்குகள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகளைப் பரப்புதல், பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்துதல் மற்றும் நேரடிப் பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பாகச் சட்டமா அதிபரினால் இந்தத் குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுத் தரவும் நீதித்துறை ஊடாகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

