மன்னார் – நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பார்வையிட்டுள்ளார்.
அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த விஜயம் இன்று(28.05.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டால் மாத்திரமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அப்பகுதி மக்கள் துரைராசா ரவிகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.