உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 5 பேர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.
குறித்த வாக்குமூலங்களை சமனல ஏரி பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், மாணவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்களை இன்று(02.05.2025) பொலிஸாரிடம் சரணடையுமாறு கூறப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவ உலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாகவே மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் உறவினர்கள் புஸ்ஸல்லாவ பொலிஸாரிடமும் முறைப்பாடு அளித்திருந்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.