யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த கணவன், மனைவியைத் தாக்கிவிட்டு 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கணவரைத் தாக்கியதுடன், மனைவியின் கழுத்தில் இருந்த நகையை அறுத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த கணவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளையர்களின் தாக்குதலைத் தடுக்க முயன்றபோது கணவர் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார். இதன் போது திருடர்களில் ஒருவன் காயமடைந்து இரத்தம் சிந்தியபடி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டமை அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், கடந்த சில நாட்களுக்குள் தமது வீட்டில் இடம்பெறும் மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கொள்ளையர்கள் கத்தி முனையில் அச்சுறுத்திய வேளையிலேயே மருதங்கேணி பொலிஸாருக்கும், அவசர இலக்கங்களான 119 மற்றும் 118 ஆகியவற்றுக்கும் தகவல் வழங்கப்பட்டதாகக் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், பொலிஸார் சுமார் 8 மணிநேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளைத் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். பொலிஸாரின் இந்த அசமந்தப்போக்கு, குற்றவாளிகள் இலகுவாகத் தப்பிச் செல்ல வழிவகுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்களும் அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொலிஸாரைக் கோரியுள்ளனர்.

