தற்போதைய அரசாங்கம் மீது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் குற்றச்சாட்டு!

26 698c47ac9db6d

தற்போதைய அரசாங்கம் தனது ஆதரவாளர்களைப் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலம், நாட்டில் எஞ்சியிருக்கும் அரச சேவையையும் சீரழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவிட்டுள்ள விசேட குறிப்பிலேயே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

“நேர்மையான மற்றும் தொழில்முறைத் திறமை கொண்ட அரச சேவை இல்லாமல் எந்தவொரு அரசாங்கமும் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்ல முடியாது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தலைவர்களுக்குப் போதிய நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும், அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும் என்றும், நாட்டை நிர்வகிக்கும்போது அனுபவம் வாய்ந்த தொழில்முறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து ஜனநாயக ரீதியில் தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் சந்திரிக்கா தனது பதிவில் விசேடமாகக் குறிப்பிட்டுள்ளார். சமன் ஏக்கநாயக்கவை தனக்குத் தனிப்பட்ட ரீதியில் நீண்டகாலமாகத் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர், ஏக்கநாயக்க மிகவும் நேர்மையான மற்றும் உயர்தரமான தொழில்முறை அரச அதிகாரி எனச் சான்றிதழ் அளித்துள்ளார். அத்தகைய அதிகாரிகளைச் சிறையில் அடைப்பது அரச சேவையை முடக்கும் செயல் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நீதி வழங்குவது என்பது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படுவது நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி முறைக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் பழிவாங்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தகுதி அடிப்படையிலான நியமனங்கள் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Exit mobile version