முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை (Railway Crossing) ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குளம் தொடருந்து நிலையத்துக்கும் முறுகண்டி தொடருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட 302.6 கிலோமீற்றர் பகுதியில் இந்தக் கடவை அமைத்துத் தரப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தொடருந்து கடவை இல்லாததால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன், உயிர் பயத்துடனேயே நடமாட வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டு தடவைகள் தொடருந்து திணைக்களத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்துத் தருமாறு மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.