நாட்டில் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கும் நோக்கில், மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2,000 ரூபாயாகக் குறைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், மதுபான விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சமூகப் பாதிப்புகள் குறித்துப் சுட்டிக்காட்டினார்.
மதுபானங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், சாதாரண மக்கள் மலிவு விலை தேடி சட்டவிரோத மதுபானங்களை (கசிப்பு) நாடுகின்றனர். இது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சட்டபூர்வ மதுபானங்களின் விலை உயர்வால் அதன் விற்பனை சரிந்துள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் பெருமளவில் இழக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு போத்தல் மதுபானத்தின் விலையை 2,000 ரூபாய் என்ற மட்டத்திற்கு கொண்டு வருவதன் மூலம், மக்கள் சட்டவிரோத மதுபானங்களை நாடுவதைக் குறைக்க முடியும் என அவர் வாதிட்டார்.
மதுபானங்களின் விலையைக் குறைக்க வேண்டும் எனச் சாமர சம்பத் தசாநாயக்க இதற்கு முன்னரும் பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். மதுபான வரி விதிப்பு முறையைச் சீரமைப்பதன் மூலம் கறுப்புச் சந்தையை ஒழிக்க முடியும் என்பது அவரது கருத்தாகும்.