நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக, 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாகப் பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இந்த வெள்ளம் அமைந்துள்ளது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாகவும், உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன் கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

