பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இலியாஸ் முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என உறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, தேவையற்ற அச்சம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகளவு எரிபொருளைச் சேகரித்தால், அது விநியோகச் செயற்பாடுகளைப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
“மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேகரிக்கத் தொடங்கினால், விநியோகத்தை முறையாக நிர்வகிக்க நாம் மீண்டும் QR குறியீடு முறையை நாட வேண்டியிருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டு, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காமல் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.