தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (நவம்பர் 19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால், அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாகப் பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்பிடி மற்றும் காணிப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தித் தேவைகள் என்பன குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு, அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
TNA ஒத்துழைப்பு: வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.
இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன், ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

