மட்டு. சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (26) உத்தரவிட்டார்.
மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சிபெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கடந்த புதன்கிழமை (25) திகதி பிற்பகல் 01.30 மணியளவில் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன்போது குறித்த பொலிசார் மீது சந்தேக நபர் மற்றும் இரு பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால் அடித்து தாக்கியுள்ளனர்.
மேலும், இரு பொலிசாரும் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகிய பிரதான சந்தேகநபர் உட்பட 3 ஆண்கள் இரு பெண்கள் என 5 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.