ஜனாதிபதியையும் தற்போதைய அரசையும் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று நுவரெலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் பொதுமக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
‘எங்கள் புத்தாண்டு நடு வீதியில்’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், பெரியோர், சிறியோர், அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வரிசை வாழ்க்கையை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம், மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
அத்தோடு, தலைகளில் கறுப்புப்பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment