மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு : ஒருவர் படுகாயம்

IMG 20210812 WA0017

மட்டக்களப்பு(batticaloa) வவுணதீவில் குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றது.

அத்துடன் துப்பாக்பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதுடன் துப்பாகி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்..

கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது,

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர்வழங்கல் சபையின் குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் துப்பாக்கி பிரயயோகம் மேற்கொண்டவரும் பாவித்துவந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினர் குடிநீரை துண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரரிடம் தண்ணீரை பாவித்து விட்டு ஏன் அதற்கான பணத்தை செலுத்த வில்லை என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் பக்கத்து வீட்டுக்காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் காலில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்னவன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டனர் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version