கண்டி – ஹதரலியத்த பகுதியில் போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று (20.06.2025) மதியம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபரொருவர் கைதாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரே சிக்கியுள்ளார்.
ஹதரலியத்த பகுதியில் உள்ள கடையொன்றுக்கு வந்த நபருக்கு போலியான 5000 ரூபா நோட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையின் போதே சந்தேகநபர் கைதாகியுள்ளதுடன், அவரிடமிருந்து 3 போலியான 5000 ரூபா நோட்டுகள், 2 போலியான 500 ரூபா நோட்டுகள் மற்றும் 2 போலியான 100 ரூபா நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்ட 9 காகிதத்துண்டுகள், போலி 100 ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்ட 4 காகிதத் துண்டுகள், போலி 500 ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்ட 4 காகிதத் துண்டுகள் மற்றும் போலி 5000 ரூபா நோட்டுகள் அச்சிடப்பட்ட 6 காகிதத் துண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஹதரலியத்த பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நாணயத்தாள்களை பயன்படுத்தும் பொது மக்கள் இவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.