வழுக்கையாற்றுப் பாதுகாப்பு: WASPAR ஆய்வு முடிவுகளை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உறுதி!

images 1 1

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வுக் கூட்டம் சுன்னாகத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், நீர்வளப் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டினார்:

காலநிலை மாற்ற அனர்த்தங்களை ‘இயற்கையின் கோபம்’ என்று கடந்து செல்வதை விட, ‘இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு’ என்று புரிந்துகொள்வது அவசியம். மழைநீர் வழிந்தோட வேண்டிய பாதைகளை அடைப்பதே வெள்ளத்திற்கு மூல காரணம்.

யாழ். குடாநாடு ஒரு தீவுப் பகுதி. எமக்கு ஆறுகள் இல்லை என்று கருதப்பட்டாலும், மழைநீரைக் கடலுக்குக் கொண்டு சேர்ப்பதோடு, நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வழுக்கையாறு போன்ற வடிகால்கள் உள்ளன. இது மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்கிறது.

வழுக்கையாறு முறையாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே, வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும். மேலும், உவர் நீர் ஊடுருவல் தடுக்கப்படும் மற்றும் கனமழை காலங்களில் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்கும்.

உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் தூர்வாரப்படும்.

“பொறியியலாளர்கள் திட்டங்களை வரைவார்கள், ஆய்வாளர்கள் மாதிரிகளைச் செய்வார்கள். ஆனால், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான். இந்தத் திட்டத்தின் வெற்றி உங்கள் கைகளிலேயே உள்ளது. வழுக்கையாற்றின் முக்கியத்துவத்தை உங்கள் பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்,” என ஆளுநர் உள்ளூராட்சி மன்றங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version