நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ (mm) இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாகக் காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கி.மீ (km) வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்தோ அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்தோ காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாகப் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

