ஊடகவியலாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!

WhatsApp Image 2022 02 26 at 6.26.43 PM

மட்டக்களப்பு, வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற இலட்சுமணன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்து களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

பொலிஸாரின் சாட்சியங்களைக் கேட்டறிந்து கொண்ட நீதிவான் சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் கைத்தொலைபேசி தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்துப் பொலிஸார் செங்கலடி வைத்தியசாலைக்கு வந்து தமது தொலைபேசியைப் பெற்றுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்தார்.

வந்நாறுமூலை சந்தைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் அமரர் கணேசபிள்ளை வாஸ்க்கரன் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் நியாயம் கேட்டு கடந்த 26ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது தொலைபேசியூடாக வீடியோ எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் வே.நந்தகுகுமார் (கண்ணன்) என்பவரால் தாக்கப்பட்டார்.

தொடர்ந்து குறித்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற நலன் விரும்பிகள் தாக்கப்பட்டனர். ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்த நபரால் அச்சுறுத்தப்பட்டனர்.

தாக்குதல் மேற்கொண்டவருக்கும் தங்கள் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கிரானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றும்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தச் செயற்பாட்டுக்குப் பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

#SriLankaNews

Exit mobile version