சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மாநாடு நாளை (19.05.2025) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் – ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களும், குறித்த நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5,000க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முதல் செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.