நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக அழிவடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் மாவட்ட மட்டத்தில் விசேட நடமாடும் சேவையொன்றை (Mobile Service) முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாகனங்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
அனர்த்தம் காரணமாகச் சிலரது வாகனங்கள் மற்றும் ஆவணங்களும் அழிவடைந்துள்ளதாகவும், அந்தத் தகவல்களையும் பெற்றுக்கொண்டு உரிய எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். தான் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தருக்கு இது குறித்து அறிவிக்க வேண்டும்.
கிராம உத்தியோகத்தர் ஊடாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தெளிவுபடுத்தி, பொலிஸ் முறைப்பாடு ஒன்றை (Police Complaint) மேற்கொள்வது அவசியம்.
குறித்த வாகனங்கள் மற்றும் ஆவணங்களின் ஏதேனும் சாட்சிகள் (Evidence) தம்மிடம் இருப்பின், அந்தச் சாட்சிகளைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமையும்.
நிலவும் சூழ்நிலையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதால், இது குறித்து அவதானம் செலுத்தி விசேட அலகொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண் 0707188866 என்ற வட்ஸ்அப் (WhatsApp) தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.