ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!
தற்பாதுகாப்புக்காக அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்குப் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defense) தீர்மானித்துள்ளது.
தற்பாதுகாப்புக்காகத் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை, எண்ணிக்கை சரிபார்ப்புக்காக மீளச் சமர்ப்பிப்பதற்குக் கடந்த மாதம் 21 ஆம் திகதி வரை பாதுகாப்பு அமைச்சு கால அவகாசம் வழங்கியிருந்தது.
துப்பாக்கி வழங்கல் தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படாத மற்றும் உரிய திகதியில் கையளிக்கப்படாத துப்பாக்கிகள் சட்டவிரோதத் துப்பாக்கிகளாகக் கருதப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனினும், அந்த பகுப்பாய்வின் பின்னர் மற்றொரு துப்பாக்கி வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவு பாதுகாப்பு அமைச்சிடம் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு 1500இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.