இலங்கையில் உள்ள நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இந்தச் சிறுவர்களை முறையான பாடசாலைக் கல்வியில் இணைப்பதிலும், அவர்கள் 18 வயதிற்குப் பிறகு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன.
போதைப்பொருள் பழக்கம், பாலியல் வன்முறை, குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டமை அல்லது வீதிகளில் கைவிடப்பட்டமை போன்ற காரணங்களால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இவர்கள் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் விபரங்கள் அறியப்படாத நிலையில் உள்ளனர்.
இந்த நெருக்கடிக்குத் தீர்வாகப் பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்து புதிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது. குழந்தையின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு வயது தீர்மானிக்கப்பட்டுப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பெற்றோர் விபரங்கள் இல்லாத பட்சத்தில், அந்தந்த மாகாண நன்னடத்தை இல்ல ஆணையாளரின் பெயர் பாதுகாவலராகப் பயன்படுத்தப்படும்.
தற்போது இலங்கையில் உள்ள 46 அரச இல்லங்கள் மற்றும் 308 தனியார் இல்லங்களில் மொத்தம் 9,191 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 3,000 சிறுவர்களுக்கு விரைவாகப் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் பணிகளை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.