படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம்
மன்னார் – கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்களின் படகு நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்றையதினம் (03.07.2023) பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் – கட்டுக்கரை குளத்தில் நேற்றையதினம் மாலை (02.07.2023) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த படகானது நீர் நிரம்பி கவிழ்ந்துள்ளது.
இந்த நிலையிலே இன்று காலை சகல கடற்றொழிலாளர்கள் தேடிய போதே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்றொழிலாளர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன மற்றைய கடற்றொழிலாளாரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து வயது-37) என்ற கடற்றொழிலாளரை, கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்கள் இணைந்து கட்டுக்கரை குளத்தில் தேடி வருகின்றனர்.
இதனையடுத்து மீட்கப்பட்ட சடலமானது மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment