பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக் கொண்டுள்ளது.
இன்று (11) நடைபெற்ற பண்டாரவளை மாநகர சபையின் மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் சாகரதீர விஷ்வ விக்கிரம வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு 01 மற்றும் 02 ஆகியவற்றின் தலா ஒவ்வொரு வாக்குகள் பெற்று மொத்தமாக எட்டு உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சைக்குழு -01 இன் தலைவர் முஹம்மத் நௌஷாத், நான்கு வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்தார்.
பிரதி மேயராக சுயேட்சைக்குழு-01 ஐச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்த்து முஹம்மத் நௌஷாத் மீண்டும் போட்டியிட்டார்.
எனினும் முன்னைய நான்கு வாக்குகள் மாத்திரமே இம்முறையும் அவருக்குக் கிடைத்தது.
பண்டாரவளை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.