தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு அலுவலகம் சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யாழ்., இராமநாதன் வீதியிலேயே இந்த அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதில் யாழ். மாநகர மேயர் வி. மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சி.இளங்கோ, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த யாழ். மாநகர மேயர் மணிவண்ணன்,
“யாழ். மாவட்டத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசங்களில் இருக்கின்ற கட்சியினுடைய செயற்பாட்டாளர்களை அழைத்து எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தோம். எங்கள் கட்சியை நிறுவனமயப்படுத்தி எதிர்வரும் காலத்தில் செயற்படுவதற்கு இணங்கி இருக்கின்றோம்.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இயங்குகின்றவர்களுக்கு மாத்திரமே அதன்மீது உரிமை இருக்கின்றது. நடைமுறையில் இரண்டு பிளவுகள் காணப்படுகின்றன. ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எட்டு மாவட்ட அமைப்பாளர்களும் அண்மையில் வவுனியாவில் ஒன்றுகூடி கட்சியைத் தூய்மைப்படுத்தி முன்கொண்டு செல்வதற்குத் தீர்மானித்துள்ளோம்” – என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமக்குரியது என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அணி உரிமை கோரி வருகின்றது.
யாழ். மாநகர சபை உறுப்பினராக இருந்தவரான மணிவண்ணன் மேயராகுவதற்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் உறுப்பினராக இருந்தார். எனினும், 2020 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவரைக் கட்சியைவிட்டு நீக்கியதாக கஜேந்திரகுமார் தரப்பு அறிவித்தது. அதை எதிர்த்து மணிவண்ணன் வழக்குத் தொடர்ந்தார். அதில் மணிவண்ணனைக் கட்சியைவிட்டு நீக்கியமை தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையில் யாழ். மாநகர சபை மேயர் பதவியையும் மணிவண்ணன் கைப்பற்றிக்கொண்டார்.
அதிலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி ஒன்று உருவாகியது. அன்று தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தன் வசப்படுத்துவதற்கான முனைப்புகளில் மணிவண்ணன் அணியினர் ஈடுபட்டு வந்தனர்.
#SriLankaNews
Leave a comment