தடைகளை மீறி முல்லைத்தீவில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்
சிறிலங்கா அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கரும்புலிகள் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாள் நிகழ்வுகளை நடந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவு கூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சிகப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கரும்புலிகளின் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு படத்திற்கான பொதுச்சுடரினை தாயக விடுதலைப்போரில் நான்கு பிள்ளைகளை கொடுத்து அதில் ஒருபிள்ளை கரும்புலியாக மண்ணுக்கு வித்தான பிள்ளைகளை பெற்றெடுத்த தாயாரான புஸ்பராணி ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கான சுடர்களை மூன்று மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றியதை தொடர்ந்து கரும்புலிகளின் பொது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் நினைவுரைகளை தொடர்ந்து சிறப்புரையினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நிகழ்த்தியுள்ளார்.
கரும்புலிகள் நாளில் கலந்துகொண்ட அனைவருக்கும் கரும்புலிகள் நினைவு சுமந்து தென்னங்கன்றுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
து.ரவிகரன் அவர்கள் பேசும் போது அந்நிய ஆதிக்கத்திற்குள் இருந்துகொண்டு நாங்கள் கரும்புலிகளை நினைவிற்கொள்கின்றோம் என்றால் அது எங்கள் உணர்வு அந்த உணர்வுடன் எங்கள் நிலம் காக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இன்றும் நாங்கள் இயலக்கூடியவகையில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
கரும்புலிகள் நாள் மதிக்கவேண்டியது. பெறுமதியான நாள். எங்கள் வீரத்தினை உலகிற்கு காட்டியநாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment